Monday 8 January 2018

ஸ்ரீமத் பாகவதம் ஒரு முகவுரை

ஸ்ரீமத் பாகவதத்தை இயற்றியவர் வேத வியாசர். இயற்பெயர் கிருஷ்ண த்வைபாயனர். வேதங்களை பிரித்து வியாசம் பண்ணியதால் வியாசர் என்றழைக்கப்படுகிறார். நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான வியாசரின் மனம், அவ்வாறு தொகுத்த பின்னும் திருப்தியடையவில்லை. அதற்கான காரணத்தை அவர் தனது ஆன்மீக குருவான நாரத முனிவரிடம் கேட்டார்.

அதற்கு நாரதர், உண்மையில், முழுமுதற் கடவுளின் களங்கமற்ற புகழை நீ வர்ணிக்கவில்லை. பகவானின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், முழுமுதற் கடவுளான வாசுதேவர் அதாவது  கிருஷ்ணரின் புகழை நீ விளக்கவில்லை. அந்த முழுமுதற் கடவுளின் சேவையில் நமது எல்லா செயல்களையும் அர்ப்பணிப்பதால் மட்டுமே நமது அனைத்து துயரங்களையும் போக்க முடியும். ஆகவே பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணிப்பாயாக. அதுவே கற்றறிந்தவர்களின் ஏக்கத்தை திருப்தி செய்ய வல்லது என்று வியாசருக்கு உபதேசித்தார்.

இவ்வாறாக, ஞானத்தின் முதிர்ந்த நிலையில், தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாசதேவர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார். ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால், அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.  இதையே பாகவதத்தில்

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸம் ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:

என்ற ஸ்லோகத்தில் காணலாம். ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுக பிரம்ம ரிஷியின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது என்பது பொருள்.


அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் பரிக்ஷித். பரிக்ஷித் ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு ஒரு முனிவரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். அங்கு சமீகர் என்கிற முனிவர் தியானத்தில் இருந்தார். அவரிடம் தான் பரிக்ஷித் மன்னன் என்றும் தான் அம்பு எய்த ஒரு மானை தேடி வந்ததாகவும், அந்த மானை பார்த்தீரா என்று பல முறை வினவியும் அவர் மௌன விரதத்தில் இருந்ததால் பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரிக்ஷித் அங்கு கிடந்த ஒரு இறந்த பாம்பை தான் வில்லினால் எடுத்து அவர் தோளில் போட்டு விட்டு சென்று விட்டான். ஆனால் அந்த துறவி அதனால் கோபப்படவே இல்லை. அவரது மகன் சிருங்கி, தவத்தில் சிறந்தவன், ஆனால் கோபக்காரன். அவன் நடந்ததை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தான். தன் தந்தையை அவமானப்படுத்திய அந்த பரிக்ஷித் மன்னன் இன்னும் ஏழு இரவுகளுக்குள் கடும் விஷமுடைய தக்ஷகன் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டு மரணமடைவனாக என்று கடும் சாபத்தை கொடுத்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பரிக்ஷித் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.

சுக பிரம்ம ரிஷியிடம் 'எது ஒருவனுக்கு  உயர்ந்த லக்ஷியம்? மரணமடையுமுன்  நான்  என்ன  செய்யவேண்டும்? மனிதனானவன் எதை கேட்கவேண்டும், செய்யவேண்டும், ஞாபகம் கொள்ளவேண்டும்? என்று கேட்கிறான். இந்த கேள்வியில் ஆரம்பித்து சுக பிரம்ம ரிஷி மற்றும் பரிக்ஷித் இவர்களுக்குள் நடந்த சம்பாதனை ஏழு நாட்களாக நடந்தது. அதுவே பாகவதம். அதில்  ப்ரம்மாவும்  நாரதரும்,  விதுரரும் மைத்ரேயரும்  யுதிஷ்டிரனும் நாரதரும்,   கிருஷ்ணனும் உத்தவரும்,  பரிமாறிக்கொண்ட  சம்பாஷணைகள் இடம் பெறுகின்றன சம்பாஷனை முடியவும் பரிக்ஷித் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன். பாக்யவான் நான். சாஸ்வதமான  ஹரியை  எனக்குக்  காட்டிவிட்டீர்களே. வேறு என்ன  வேண்டும்? என் அறியாமை, சந்தேகம் சகலமும் நீங்கின. இனி என்னை அந்த  தக்ஷகன் என்கிற சர்ப்பம்  தீண்டி மரணம் அடைந்தாலும் துளியும்  வருத்தமோ, கவலையோ இல்லை என்றான்.. அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் உடனிருந்து பாகவதத்தை கேட்டார். அந்த விஷயத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிஷாரண்யத்தில் வைத்து கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Thank u so much,god bless u,very very useful

    ReplyDelete